Thursday 15 March 2018

முற்றுப்புள்ளி


தனிமையில் இருக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே
அறிவாய் உந்தன் கவலைகளை
படிக்கும்வரை பள்ளி, பல்கலை என்று பலநாட்கள் கழிந்தன
காலைதோறும் பணியிடம் சென்று -பின்
உனை வளர்க்க(அறிவு)  கல்வி நிலையம் நிதம் சென்று...
இத்தனை காலமும் இப்படியே போயிற்றடி- மகளே
இன்றொரு நாள் மட்டும் அத்தனையும் நீக்கி 
என்னுடன் மட்டுமே பேசிக்கொண்டேனடி
எத்தனை கவலைகள் என்னுள்ளே - போடி
என்னையே நம்பவில்லையடி- மகளே
ஒரு இரண்டரை மணித்தியாலங்கள் இருந்திருப்பேனா???- இல்லை
இருந்த இடத்தை விட்டு எட்டு மணித்தியாலங்கள் எழும்பவேயில்லையடி
என்னவோ பங்குனி காலம்  என்பதால்
பகலும் என்னைக் கடக்க விரும்பவில்லை போலும்
இத்தனை காலமும் என்னையே நான் மீட்டவில்லையடி - கொஞ்சம் பொறு!!!!
இறுதியில் வெறுப்பு மேலிட வெற்றிடமாய் கிடந்தது -என்
நிழலாடும் உருவபொம்மை
அழுது கொட்டிட  மனது விரும்பிட
என் கண்ணீரை கட்டியணைத்து முத்தமிட - காலமகள்
கருக்கொண்டு நீர் பற்றாக்குறை போக்க,
என் கண்ணீரையும் கடன் கேட்டாளடி - மகளே
முதல்முறையாக என்னை வெறுத்து அழுகின்றேன்!!!
உலக மேடையில் எனக்கான அத்தியாயத்தை 
முடிக்காமலேயே நான் என்னை முடித்துக்கொண்டால்???




Saturday 13 January 2018

                                    ஓர் நாள் வீதியில் .....





நீயும் நானும் நினைத்துக் கொள்கிறோம்

உலகம் வெகுவாய் மாறிவிட்டதென்று

எதில் மாற்றம் கண்டாய் - நீ

நீ உடுக்கும் உடையிலா, உன் அலட்டல் அலைபேசியிலா

எதுவும் மாறவில்லை இங்கே, பெண்ணைப் பிடித்த 

பிடித்த பிசாசுகள் இதிகாசங்களில் மட்டும் தானா? இல்லை

இந்த நொடி வரையிலும்,

பேரூந்தில் உன் இச்சை தீர்க்க முன்னிற்கும் இளைஞனே!

பின் தொடரும் பேரூந்தில் கூட  உன் வீட்டுப் பெண் இருக்கலாம்

அதிலும் உன் போல் இளைஞனைக் காணக்கூடும்......

அந்தி சாயும் தருணமதில் அலுவலே அன்றி பேரூந்துப் பயணத்தில்

அருகிலிருக்கும் அணங்கியை நெருங்குவதேனோ?

அன்று கண்டோம் கயவனை - இன்று 

பகட்டிற்கு முகமினுக்கி, உன் நெடிய வியர்வையை 

வெளிநாட்டவன் மலர் வாசனையில் மாற்றி 

கையிலொரு வெள்ளி மின்னி, கழுத்திலொரு  இரும்பு மின்னி 

இன்று உனக்கான அடையாளங்கள் இவைகள்

உன் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் திட்டமிட்டுக்

காட்டிக் கொள்வதில் சுகம் கண்டாய்  நீ

எதற்கென்று பெண்ணாய் பிறந்தோமடா

இறைவனிடம் மனுக்கொடுக்கின்றேன் - நான்

பெண்களை கற்சிலைகளாய் மாற்றிட 

தேர்தலில் பெண்கள் தேவையென்றிடும் ஆண்களே!

தெருவிலே முதலில் வழி விடுங்கள்

ஒரு கணம் நின்று நிதானியுங்களேன்

கண்களால் கைது செய்யப்பட்டும் காட்சிகளால் மௌனிக்கப்பட்டும்

காட்சிப் பிழைகளானோம் இந்தப் பூமியில் .......???




                                                                                                                        திவி






Friday 8 December 2017

                   
 பயணங்கள் முடிவதில்லை...


    பயணங்கள் முடிவதில்லை. நாள்தோறும் அரங்கேறும் அனுபவங்கள் அவை. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று பயணப்படுவது. அதுவும் பேரூந்தில் யன்னலோர இருக்கையில் அமர்ந்து பாடல்களை ரசித்தபடி பயணம் செய்வதில் அலாதிப் பிரியம் எனக்கு. வகுப்பறைக்குள் ' Trip' என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பவளும் நான்தான் உச்சக்கட்டமாக அதனை ஆமோதிப்பவளும் நான்தான். 

வெளிநாட்டிலிருந்து மாத விடுமுறையில் நாட்டிற்கு வந்திருந்த என் மாமாவின் நண்பர் ஞானம் அண்ணா எம்மையெல்லாம் கதிர்காமம் அழைத்துச் செல்வதாக ஏற்கனவே மாமாவிடம் சொல்லி வைத்திருந்தார். யார் யாரெல்லாம் வருகிறார்கள் எனப் பேசிக்கொண்டார்கள். எனக்கோ ஞானம் மாமாவை தெரியாது. இதற்குள் அவரது குடும்ப உறுப்பினரைத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கதிர்காமம் என்றாலே பழசுகள் அரோகராப்போடுங்கள் அவர்கள் போட்ட வரிசையில் என்னுடைய வயதில் யாரும் அங்கு இல்லை. இருந்தால் பேச்சுத்துணைக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனாலும் என்ன ஓசீப்பயணம் ஆயிற்றே. இது வரையிலும் நான் போகாத இடம்.
                                எனக்கோ அன்று முழுவதும் இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல்நாள் இரவுப்பொழுதினை என்னால் கடக்க இயலவில்லை. இயற்கையின் நியதியும் அதுதானே. எல்லோருமாகச் சேர்ந்து மறுநாள் காலை 4 மணிக்கு புறப்படுவதாக தீர்மானமாயிற்று. இரண்டு நாட்களின் பயணம் மட்டுமே என் எண்ணத்தில் நிழலாடியது. மறுநாள் 2 மணிக்கெல்லாம் நான் எனது பயணப்பையுடன் தயாராகிவிட்டேன் என்றே சொல்லலாம். அடுக்கி வைத்த ஆடைகளை அடிக்கடி சரிபார்த்துக் கொண்டேன். எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சரியாக 4 மணிக்கெல்லாம் 'ஈசன் ரவல்ஸ்'  தனது பயணத்தைத் தொடர வந்திருந்தது. பிள்ளையார் கோவிலில் பேரூந்து  வந்திருந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பயணத்தை நல்லபடியாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்தக் கோவிலில் தேங்காய் உடைப்பது என்று பேசியமையுமாகும்.

                    சொல்லிவைத்த நேரத்திற்கு புறப்படுவதற்கு நாங்கள் ஒன்றும் வெள்ளைக்காரனில்லையே. எல்லோரும் வந்து சேருவதற்குள் மாலை 4.45 ஆகியது. எனக்கோ பேரூந்தில் ஏற எப்போது அனுமதிப்பார்கள் என்றிருந்தது. சுற்றும் முற்றும் என் கண்கள் எல்லோரையும் நோட்டமிட்டது. எனக்கு ஆசனம் கிடைக்குமா என்ற நோக்கில்த்தான். இதுவே எனது வீட்டில் ஒழுங்குபடுத்திய சுற்றுப் பயணம் என்றால் நான் தான் நாயகி. ஆனால்  சுற்றுப்பயணத்தை ஒழுங்குபடுத்தியவர்  ஞானம் மாமாதானே. அதனால் அவர்களுடைய உறவினர்கள் ஏறும் வரை காத்திருந்தேன். எனது பாட்டியையும், மாமாவையும் தவிர வேறு ஒருவரும் எனக்கு அறிமுகமானவர்கள் இல்லை.    சமைப்பதற்காக கொண்டு சென்ற பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. எல்லோரும் ஏறிய பின்பு நானும் ஏறிக்கொண்டேன். பேரூந்தின் பின்பக்க ஆசனங்கள் முழுவதையும் நாம் கதிர்காமத்தில் சமைப்பதற்காக கொண்டு சென்ற பொருட்கள் ஆக்கிரமித்து கொண்டன.அதற்கு முன்னிருந்த ஆசனம் ஒன்று என் வரவை எதிர்பார்த்திருந்தது போலும். ஓடிப்போய் அமர்ந்து கொண்டேன். எல்லோர் முகத்திலும் பக்திப்பரவசம் தான். எனக்கருகில் என் பாட்டி அமர்ந்து கொண்டார்.
                              சிலநிமிடங்கள் கழித்து பேரூந்து எல்லோரையும்                யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்கு ஏறத்தாழ  395KM பயணம் செய்ய வேண்டும். பேரூந்துக்குள் பக்தி மயமான பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன.எனக்கோ 'பாட்டை மாத்துங்கோ' என்று கூறவேண்டும் போலிருந்தது. ஆனாலும் வயசு போனதுகள் ஏதாவது தப்புக்கணக்கு போட்டு விடுங்களோ என்று நினைத்து ஒன்றும் கூறாமலிருந்து விட்டேன். எங்கேயாவது இறங்க வேண்டியிருந்தால் ரைவரிடம் (Driver) இது பற்றிக் கூறிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். யாழிலிருந்து புறப்பட்ட பேரூந்துப் பயணம் முல்லைத்தீவு, திருகோணமலையைத் தாண்டியது. என்னையும், ஞானம் மாமாவையும், என்னுடைய மாமாவையும் தவிர எல்லோரும் காத்துவாக்கில் நல்ல உறக்கம். 

        அச்சமயத்தில் வண்டி திருகோணமலையில் உள்ள ஏதோ ஒரு ஹோட்டலில் நிறுத்தப்பட்டது. எல்லோரும் தூக்கம் கலைந்து வண்டியில் இருந்து இறங்கி அவசர தேவைக்காக வரிசையில் நின்று பாரத்தை இறக்கி வைத்தார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்போதுதான் நாம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டோம். எனது பாட்டிக்கு ஒரு துணைப்பாட்டி கிடைத்துவிட்டார் என்பது பேசிக்கொண்டேயிருந்த என் பாட்டியின் முகத்தில் ஒரு பூரிப்பில் தெரிந்தது. 10 வருசத்துக்கு முதல் அவர் இருக்கேக்க வந்தது. முருகன் இப்பதான் வழிவிட்டிருக்கான் என ஏதோ கூறிக்கொண்டிருந்தாள். பாட்டி கேட்டதற்கிணங்க துணைப்பாட்டியின் ஆசனத்தில் இருக்கவேண்டியதாயிற்று. பரவாயில்லை யன்னலோர இருக்கைதான். எனதருகில் இப்போது  35 வயது மதிக்கத்தக்க ஞானம் மாமாவின் மனைவி கல்பனா அக்கா. எனது பாட்டியை விட இவருடன் இருப்பது மனதிற்கு முதலில் சங்கடமாயிருந்தது. பின்னர் இருவரும் எமது சுயவிபரக்கோவையை பரிமாறிக்கொண்டோம். பழகிக்கொண்டோம். நேரம் 10 மணியைத் தாண்டியிருந்ததனால் நிலவொளியின் வீச்சு நிலவு தன்னை நிறைமாதமாக இருப்பதைக் காட்டியது.

                      சில்லென்ற காற்றும் ஒருவித மணமும் நாம் ஏதோ கடற்பிரதேச வீதியால் சென்றுகொண்டிருந்ததை உணர்த்தியது. அந்த மணம் 10 நிமிடங்களுக்கப்பால் காணாமல் போய்விட்டது. மீண்டும் கல்;பனா அக்காவுக்கு பேச்சுக் கொடுத்தேன். ஏதோ நேர்த்திக்கடனுக்காகவே இப்பயணம் என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். ரைவருக்கும்  பக்திப்பாடல் கேட்டு அலுத்து விட்டது போலும். அவரும் என்னைப் போல கொஞ்சம் இரசனையுணர்வு கொண்டவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தப் பொழுதுக்கான மனம் மயக்கும் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தார். எனக்குப் பிடித்தமான குரலில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற  பாடலை என்ற பாடலில் மூழ்கி என் இயற்கையுடனான நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். 

                                  இந்தப் பயணம் இப்படியே தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்ற என் எண்ணத்திற்கு தடைபோட்டது பேரூந்து நிறுத்தம். பேரூந்துக்குள் ஒரே சலசலப்பு. Driver seat இலிருந்து பின் இருக்கை வரைக்கும் குறுஞ்செய்தி ஒன்று  பரவிக்கொண்டிருந்தது. நானும் ஆர்வத்துடன் எட்டிப்பார்த்தேன். பேரூந்தின் விளக்கு வெளிச்சத்திற்கு தாய் யானை ஒன்றும் சேய் யானை ஒன்றும் நிற்பது தெரிந்தது. உடனே என் கைப்பைக்குள் இருந்த Camera ஐ On பண்ணி யானைகளை Photo எடுப்பதற்கு முயற்சித்தேன். பலன் கிட்டவில்லை. Camera வின் கண்களுக்கு யானைகள் தெளிவாகப் புலப்படவில்லை. இதற்கிடையில் முன்னாயத்தமாக யானைகள்  இப்படி வழிமறிக்கும் (உண்மையில் அவைகளின் நடமாட்டத்திற்குரிய நேரமது) என்பதைத் தெரிந்து  வாழைப்பழக்குலையை வாங்கி வைத்திருந்தனர் நமது தீர்க்கதரிசிகள். அவை மிரண்டு கொண்டிருந்தன. முன்னாலிருந்து சைகை வர அமைதியானோம். ஞானம் மாமா வாழைப்பழத்தை கொடுக்க தும்பிக்கை நீட்டி பெற்றுக் கொண்டு வழிவிட்டன. 'போன உசிரு வந்திருச்சு...' பாடல் நினைவுக்கு வர மனதிற்குள் நகைத்துக்கொண்டேன். மீண்டும் எமது பயணம் தொடர்ந்தது.

           எங்கும் நிசப்தம்.  குளிர்காற்று திறந்திருந்த யன்னலோரக் கதவினூடாக என்னை மயிர்கூச்செறியச் செய்தது. சற்றுநேரம் கண்மூடி நித்திரையை வரவழைத்துக் கொண்டேன். சிலமணி நேரம் கழித்து பேரூந்து எங்கோ ஓரிடத்தில் நிறுத்தப்பட்டதை உணர்ந்து கொண்டேன். கையில் இருந்த கைக்கடிகாரம் 2.30 ஐ காட்டியது. 'எல்லாரும் இறங்குங்கோ கதிர்காமம் வந்திட்டு' என்ற குரல் கேட்டு கண்ட கனவை பாதியிலே தொலைத்து அனைவரும் தூக்க அசதியுடன் பேரூந்தை விட்டு இறங்கினார்கள். எனக்கோ எங்கேயாவது முகம் கழுவி விட்டு காலை நீட்டி  நிமிர்ந்து தூங்க வேண்டும் போலிருந்தது.
          நாங்கள் எல்லோருமாகச் சேர்த்து 15 பேர் வந்திருந்தோம். எம்மையும் எமது பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்காக மடம் தேடும் படலம் ஆரம்பித்தது. ஒருவாறாக மடத்தின் அரைவாசிப்பகுதியை கைப்பற்றிய பெருமை ஞானம் மாமாவின் அப்பாவையே சாரும். தண்ணீர்த் தொட்டி தேடி கால்களை நனைக்கவே பிடிக்கவில்லை. எங்கே ஈரம் தொற்றி குளிர்ந்து விடுமோ என்ற பயம்தான். எல்லோரும் அவரவர் கொண்டுவந்த விரிப்புக்களை விரிக்க நானும் எனது பாட்டியும் ஒரு விரிப்பையே பங்கு போட்டுக்கொண்டோம். 'ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிட வேண்டும்' என பாட்டி என்னிடம் சொல்லி வைத்தாள். இன்னும் 2 மணித்தியாலத்துள் தூங்கி எழும்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அயர்ந்துவிட்டேன். சொல்லி வைத்தாற்போல் ஐந்து மணிக்கு எல்லோரும் கதிர்காமக் கோயிலைத் தரிசனம் செய்வதற்காக மாணிக்க கங்கையில் நீராடினோம். என் பற்கள் குளிரால் தமக்குள் அடித்துக்கொண்டன. ஓரிரு நிமிடங்களின் பின்னர் என் உடல் தண்ணீருக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது. கங்கையிலிருந்து மீண்டுவருவதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மாணிக்க கங்கையை பார்த்த போது இந்த கங்கை இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறது: இன்னும் எவ்வளவு காலம் ஓடும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

                             எனக்கான சிரமம் சற்று நேரத்தில் காத்திருந்தது. எனக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்குமானது என்றே கூறுவேன். இவ்வளவு பெரிய பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடை மாற்றுவதற்கான மறைவு இடங்கள் கட்டப்படவில்லை என்பதை நினைக்கும் போது ஆலய நிர்வாகத்தின் மீது கொஞ்சம் கோபம் தான். அகன்று கிளை பரப்பி நின்ற ஒரு மரத்தின் பின்னால் சிரமப்பட்டு உடைகளை மாற்றிக் கொண்டோம்.                           
                    நானும் எனது பாட்டியும் சேர்ந்து கதிர்காம முருகனை தரிசிக்க ஆயத்தமானோம். கோயிலருகே சென்றதும் பாட்டி 'அப்பனே முருகா' என்று முருகனுடன் ஐக்கியமானார். என்னைப் பொறுத்த வரையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் கூறமாட்டேன். உண்டு என்றும் கூறமாட்டேன். ஏனெனில் நான் சந்தர்ப்பவாதி. தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கதிர்காமத்தலம் பற்றிய கதைகளை 10ஆம் வகுப்பில் படித்த ஞாபகம். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் கூறுவதாகப் படித்திருக்கின்றேன்.

          நாங்கள் சென்ற சமயம் திருவிழாக்காலமாக இல்லாதிருந்தமையால் நன்றாக எல்லாவற்றையும் பார்த்து இரசிக்கக் கூடியதாக இருந்தது. கோயிலைச் சுற்றிக் கும்பிடுவதற்காக பாட்டி மெல்ல நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தேன். பத்து அடி உயரமான மதில்களில் யானைகளினதும், மயில்களினதும் அணிவகுப்பு. கோயிலைச் சுற்றி வர 'வட்டாரம்' எனப்படும் சிறுபிரகாரம் உள்ளது. கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனையின் கதவுகள் போன்றிருந்தன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களாலான இரண்டு படிகள் உள்ளன. வெண்கலத்திலாலான பெரிய சேவல் விளக்குகள் இரு புறமும் நிற்கின்றன. கந்தன் குறித்த புராணக் காட்சிகள் ஓவியங்களாக சுவர் முற்றிலும் வரையப்பட்டிருந்தன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூஜை செய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே இருப்பது லதா மண்டபம். மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூஜை செய்யத் திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது.

                         பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழங்கள், சிவப்புச் செயற்கைமாலை சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து அதனை மழுண்டும் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூஜை நடைபெறுகின்றது. குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு துண்டைத் தொங்க விட்டு பூஜை செய்கிறார். கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தெய்வானை சந்நிதி ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஸ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. இங்குள்ள போதி மரங்கள் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகச் சொல்லப்படுகின்றது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பௌத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவுமொன்றாகும். 
                             கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்திய தோற்றத்தில் இருக்கிறார் வள்ளி. அருகில் ஒரு அம்மன் கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன. விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கோலாட்டம் ஆகியனவும் நடைபெறுமாம். இங்கு மாணிக்க கங்கையாற்றின் கரையில் மாணிக்க விநாயகர் திருக்கோயில் உள்ளது. கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் 'வள்ளித்தீவு' என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றது. இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்றும் கூறப்படுகின்றது.
                                    கோயிலில் இருந்து வெளியே வரும்போது மணி 12.20 ஐ கடந்துவிட்டது. நாங்கள் இருவரும் கதைத்துக்கொண்டே மடத்தருகே உட்கார்ந்து கொண்டோம். இதற்கிடையில் எங்களில் ஒரு கூட்டம் தமது நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டாக 'குழைசாதம்' செய்வதற்கென பணிக்கப்பட்டார்கள். தங்கள் கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் என்பது சாதம் உண்ணும் போது புரிந்துகொண்டேன். எல்லோரும் தமக்கு தெரிந்த கதைகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

 நானோ அம்மாவிடம் கெஞ்சி வாங்கிய 3000 ரூபாயை பொருட்களாக மாற்றுவதில் குறியாக இருந்தேன். பாட்டியிடம் கூறிவிட்டு கடைப்பக்கமாகச் சென்று எனக்கான தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன். கடைகளிலும் சிரிப்புதான் தெரிந்த இம்மியளவு சிங்களத்தை வைத்து சமாளிக்க முயன்றதேயாகும். ஒருவாறாக எனக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டேன். கைப்பைக்குள் நோட்டமிட்ட கண்கள் வெறும் 1200ருபா இருப்பதைக்கண்டு கொண்டன. இதற்கு மேல் செலவு செய்தால் செல்லக்கதிர்காமத்தில் ஏதும் வாங்க முடியாது போய்விடும் என்ற எண்ணம் மேலோங்க மடம் நோக்கிச் சென்றேன்.

                 என்னுடைய பாட்டிக்கு நான் வாங்கிய பொருட்களை காட்டி விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காதவளாய் பைக்குள் போட்டுக்கொண்டேன். ஏனெனில் அவரின் பதில் தெரியும். வீட்டிலே பல தடவைகள் கேட்டதுண்டு.  எங்களோடு வந்திருந்தவர்கள் சிதறி கோயில் தரிசிக்க, கடைக்கு என தத்தம் பிரயாத்தனங்களில் ஈடுபட்டார்கள். எனது பாட்டியுடன் செல்லம்மா பாட்டி மீண்டும் கைகோர்த்து விட்டார். இருவரும் தங்களது பிரசங்கங்கங்களை நிகழ்த்தினர். Camera ஐ எடுத்து கண்டதையெல்லாம் கண்டபாட்டில் எடுத்து Memory  ஐ முழுமையாக்கியதில் ஆத்மதிருப்தி. ஆனாலும் பரவாயில்லை. photo journalism படித்திருந்தது பெரும் உதவியாய் இருந்தது. ஓரளவுக்கு நேர்த்தியாகவே இருந்தது.  இரவுச்சாப்பாடு என்னவாய் இருக்கும் என்ற அங்கலாய்ப்பு வேறு. மத்தியானம் வைத்த பருப்பு மிஞ்சியதால் இரவுக்கு பாணையே வாங்குவதாக தெரிவித்திருந்தது கூட்டணி. பாணும் பருப்பும் இரவுச் சாப்பாடாயிற்று. பிறகு என்ன ஒரு போர்வைக்குள் இரு தூக்கம். (நானும் எனது பாட்டியும்)

                       செல்லக்கதிர்காமம் புறப்படுவதற்கென குளித்து காலை 6 மணிக்கெல்லாம் ஆயத்தமானோம். முதல் நாள் இரவில் பயணம் செய்ததால் பெரிதாக ஒன்றையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் அதே யன்னலோர இருக்கையை நாடினேன். செல்லக்கதிர்காமம் செல்லும் வழியில் வந்த சுகந்தத்தை அனுபவிக்க முடிந்தது. வரிசையாக வனத்தின் எல்லைகள், சாலை நெடுங்கிலும் ஒருவித வனப்பு. பனிமூட்டம் பகலவன் வரவை கண்டு தம் இருப்பிடம் திரும்புவதற்கான நேரமது. அருவி போன்றதொரு நீர்நிலை ஆங்கே ஓடிக்கொண்டிருந்தது.பேரூந்தின் வேகம் குறைந்தபோது நான் நிறையவே யோசித்துவிட்டேன். தண்ணீர் போத்தல்கள் வாங்கவே ஞானம் மாமாவும் என்னுடைய மாமாவும் இறக்கி விடப்பட்டிருந்தார்கள். அச்சமயத்தில்தான் பூக்களின் மாநாடே நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தின் பெயர் சரியாக நினைவில்லை.பல நிறங்களில் பக்குவமடைந்து பருவமகளுடன் காற்றில் ஏதோ பேசிக்கொண்டது என் காதுகளுக்கு கேட்டது. இயற்கை எல்லோருக்கும் அழகுதான்.

                                        சரியாக 30 நிமிடங்கள் கழித்து செல்லக்கதிர்காமத்தைச் சென்றடைந்தோம். பேரூந்திலே மேலே செல்லும் மார்க்கம் இருந்தும் படிகளில் நடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும் என பேரூந்துக்குள்ளே கதைத்துக்கொண்டது தெரியும். படிகளில் ஏறத்தொடங்கிய ஆரம்பத்தில் புத்துணர்ச்சியாகத்தான் இருந்தது. இன்னும் மேலே செல்லச்செல்ல ஐயோ என்னடா இது இன்னும் முடிவாகவில்லையே கீழேயே நின்றிருக்கலாம் என எண்ணியது மனம். திரும்பி பார்த்தேன். எனது பாட்டியும் செல்லம்மா பாட்டியும் அம்மன் பவனி வருவதுபோல் ஆடி அசைந்துவந்து கொண்டிருந்தனர். ஆனாலும் என் பாட்டிக்கு தைரியம் அதிகம். எந்த இடத்திலும் களைப்பாற இருக்கவில்லை. நானோ நாலைந்து இடங்களில் இருந்து விட்டேன். எனக்கருகில் ஞானம் மாமாவின் சித்தியாம் புவனேஸ்வரி. நாங்கள் இருவரும் கதைத்தபடியே மலை ஏறும் காண்டத்தை நிறைவு செய்துவிட்டோம். எனக்குள் ஒரு நினைப்பு இவ்வளவு உயரத்தில் இருக்கும் கோயில் ஆடம்பரமாக இருக்கும் என்று. என்னுடன் பேசிக்கொண்டு வந்த புவனேஸ்வரியம்மா அர்ச்சனை பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் கூறிவிட்டு கோயிலுக்குள்ளே சென்றேன். பூசை நடந்து கொண்டிருந்தது. கதிர்காமத்தை விட செல்லக்கதிர்காமம் வெகுவாக என் மனதை பாதித்திருந்தது என்றே சொல்லலாம். கால் கடுப்பின் போது முருகனுக்கு வேறு போக்கிடமில்லாது இங்கு மலையேறி விட்டானே என அடிக்கடி நினைத்துக் கொண்டேன். 
மலை உச்சியிலிருந்து கீழே பார்த்த போது உடலே நடுங்கியது. பார்க்கவே பயமாக இருந்தது. என்னோடு வந்தவர்கள் எல்லோரும் கோயிலைச் சுற்றிச்சுற்றி பார்த்தார்கள். கோயிலின் ஓர் ஓரமாயிருந்து எம் முன்னோர்களின் (குரங்குகள்) விளையாட்டினை தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பக்தர்கள் கொண்டுவந்த தேங்காய், வாழைப்பழம் என அவற்றைப் பிடுங்கி உண்டன. அதிலும் அவர்களுக்குள் போட்டி. மரத்திலிருந்து தாவுகின்ற போது அதன் இயல்பு மறந்து ஐயோ கீழே விழுந்து விடுமோ என்று என்னை அறியாத பயம்.

                                      மீண்டும் கீழே இறங்குவதை நினைக்கவே மனம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கே கொடுக்கப்பட்ட வெண்பொங்கல் பிரசாதம் ஏற்கனவே இருந்த பசியை கிளறிவிட்டிருந்தது. நல்ல வேளை தனக்கு வேண்டாம் என்று கொஞ்சம் எடுத்துவிட்டு மிகுதியை தந்தார் பாட்டி.  வெண்பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. நேரம் ஒரு மணியைக் கடந்து கொண்டிருந்தது. வெயில் தெரியவில்லை. அவ்வளவு மரங்கள், குளிர்மை கூடிய இடமது. எல்லோருடைய ஏகோபித்த சம்மதத்துடன் 1.30 க்கு கீழே இறங்குவதென்று முடிவாயிற்று. ஏறியதை விட இயங்குவதில் பெரிதாக கஸ்டம் தெரியவில்லை. சிறிது தூரம் நின்றவுடன் கால்கள் நடுங்கி தரையில் நிற்க மறுத்துக்கொண்டன. ஒரே நடையில் இறங்கி விடுவதென்று எடுத்த என் முயற்சி வெற்றியடையவில்லை.

இறங்கும் போது மீண்டும் அதே வானரங்களின் விளையாட்டு. ஒருவாறு எல்லோரும் இறங்கி வருவதற்குள் 3 மணியாகிவிட்டது. மலையேறிவிட்டு பிறகு வாங்கலாம் என்று நினைத்து விட்டுச்சென்ற கடைகளுக்குள் புகுந்து கொண்டேன். எனக்கு விருப்பமான பொருட்கள் எதுவும் இல்லாமையால் எதையும் வாங்கிக் கொள்ளாமல் பேரூந்தை நோக்கி என் கால்கள் நடைபோட்டன. இறங்கி வந்த களைப்பு வேறு. அதுதான் இந்த உடனடி முடிவு. வீடு திரும்புவதற்காக பேரூந்துக்குள் ஏறிக்கொண்டோம்.


அதே பேரூந்து, அதே இருக்கை, அதே பாதை, அதே மனிதர்கள். ஆனால் மனம் மட்டும் ஏதோ கனத்திருந்தது. பயணம் முடியும்  தறுவாய். பயணங்கள் முடிவதில்லை.மீண்டும் ஒரு பயணத்தை நம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

திருநங்கைகளும் ஊடகங்களும்


ஊடகங்களின் வளர்ச்சியும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அளவிட முடியாதவை. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம், பண்பாடு, கலாசாரம் முதலியவற்றை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்குகின்றன.

திருநங்கைகள் குறித்து வெகுஜன ஊடகங்களின் பங்களிப்பு


மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மூன்றாம் பாலின புரிதலை மக்களிடையே எடுத்துச் சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியுள்ளன. மேற்கத்தேய நாடுகளின் பாலினப் புரிதல் வளம் பெறத் தொடங்கியதும் மூன்றாம் பாலினத்தவருக்கான அங்கீகாரமும் முன்வைக்கப்படத் தொடங்கியது. பெரும்பாலும் பத்திரிகைகள் இவர்கள் குறித்த புரிந்துணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகள் குறித்த பார்வையின் பங்களிப்பு அதிகம் எனலாம். திருநங்கைகளின் வாழ்வியல் பிரச்சினைகள், அவர்களுக்கான அங்கீகாரம், உயர் பதவிகள் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் குறித்து ஓரிரு கட்டுரைகள் பத்திரிகைகள் அண்மைக் காலமாக பிரசுரமாகி வருவதை அவதானிக்க முடிகிறது. மாத இதழான 'வானவில்' பத்திரிகை 'இலங்கையில் திருநங்கையர்' என்னும் தலைப்பில் திருநங்கைகள் சார்ந்த பிரச்சினைகள், அவர்களுக்கான அமைப்புக்கள், சமூக மற்றும் தொழில்வாய்ப்பு தொடர்பாக பிரசுரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிவரும் 'தீபம்' பத்திரிகை 'நான் பானுஜன் அல்ல மோனிஷh' என்னும் தலைப்பில் ஈழத்து திருநங்கையொருவரின் வாழ்வியல் வரலாற்றை அலசி வருகின்றது. வானொலிகளில் இவர்கள் குறித்த உரையாடலோ, நிகழ்ச்சிகளோ பேசு பொருளாக்கப்படுவது மிக மிகக் குறைவாகவே உள்ளது. 

மேலை நாட்டு தொலைக்காட்சிகளில் மூன்றாம் பாலினம் குறித்த விவாதங்கள் ஒளிபரப்பாகின்றன. ஈழத்தில் Dan TV இல் 'யாவரும் கேளீர்' எனும் நிகழ்ச்சி மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

குறும்படங்கள் இன்றளவில் மக்கள் மத்தியில் கருத்துருவாக்க விதைப்பைச் செய்ய வல்லன. குறுகிய மணி சேரத்திற்குள் காட்சிகளினூடாக சமூகத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவை. அந்த வகையில் திருநங்கைகள் குறித்த ஏராளமான குறும்படத் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் சில தமிழ் குறுந்திரைப்படங்கள் இவர்களுடைய வலிகளை கூறியிருக்கின்றன. 'காகிதப்பூக்கள்', 'நானும் பெண்தான்', 'அச்சமில்லை', 'மனம்', 'மனிதம்', பேதை', 'என் இடம்' முதலியன குறிப்பிடத்தக்கவை. 

ஆவணப்படங்கள் தற்போது பெருகி வரும் ஊடகவழி என்றே கூறலாம். இந்தியாவைப் பொறுத்த வரையில் திருநங்கைகள் குறித்த சமுதாயப் பார்வையானது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆவணப்படங்கள் என்ற ரீதியில் திருநங்கைகளது வாழ்வியல் சடங்குகள், கூத்தாண்டவர் கோயில் திருவிழா, மிஸ் கூவாகம், மறுக்கப்படும் உரிமைகள் முதலியவை பேசப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் 'ஆண்டவனின் மணமகன்','அஃறிணைகள்', 'அரவாணிகள்' முதலியவையும், ஈழத்தில் பிறைநிலா கிருஸ்ணராஐாவின் 'இருக்கிறம்' ஆவணப்படத்தினையும் குறிப்பிட முடியும்.

இணையத்தில் திருநங்கைகள் பற்றிய பரவலான கட்டுரைகள், பதிவுகள் சமூகவலைத்தளங்களான முகப்புத்தகம், வலைப்பூக்கள் முதலியவற்றிலும் காணலாம். குறிப்பாக,  Sahodari.org, orinam.net ஆகிய இணையத்தளங்களிலும்  இவர்களுடைய செய்திகளைக் காணமுடியும். 

வெகுஜன ஊடகங்களில் திருநங்கைகளின் பங்களிப்பு

மேலைத்தேய நாடுகளில் திருநங்கைகளின் நிகழ்ச்சி மற்றும் பங்களிப்பு என்பன அதிகளவில் உள்ளன. இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான பங்களிப்பு உண்டு. இந்தியாவில் திருநங்கை கல்கி சுப்ரமணியம் 'சகோதரி' என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிகின்றார். Chennai in and out Magazine’

 பத்திரிகையில் 'விடியலைத் தேடி திருநங்கைகள்' எனும் தலைப்பிலான கட்டுரைகளை திருநங்கை ஆயிஸா எழுதி வருகின்றார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் திருநங்கையான ரோஸ் வெங்கடேசன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'இப்படிக்கு ரோஸ்' மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் 'இது ரோஸ் நேரம்', 'ரோஸிடம் பேசுங்கள்' முதலிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அண்மையில் 'லோட்டஸ்' ( Lotus Tv Channelதொலைக்காட்சியில் திருநங்கை பத்மினி பிரகாஸ் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். சினிமாவில் ஏராளமான திருநங்கைகள் தங்களது பங்களிப்பை ஊடகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

திருநங்கைகளும் உலக சினிமாவும்

     மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமுதாயத்தில் அங்கிகாரம் பெறுவதில் எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டதோ அதே படிமுறை அவர்கள் குறித்த திரைப்படங்களில் அவை காண்பிக்கப்பட்டன. 1960 களிலேயே தான் திருநங்கைகள் குறித்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. உலகளவில் அதாவது பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், கனடா மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் திருநங்கைகள் தொடர்பான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் திருநங்கைகள் கதாபாத்திரங்களிற்கு திருநங்கை அல்லாதோரை நடிக்கச் செய்திருந்தனர். பிற்பட்ட காலங்களில் திருநங்கை கதாபாத்திரத்திற்கு திருநங்கைகளையே திரைப்படங்களில் காண்பித்தனர்.

     உலக சினிமாவிலே பொதுவாக திருநங்கைகள் தமது பெண்மை உணரும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் உளச்சிக்கல்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புக்கள், காதல் தோல்வி, சமூகப்பிரச்சினைகள்,பால்மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்பான விடயங்கள் குறித்து பேசப்பட்டன. ஆரம்பத்தில் 'திருநங்கை' கதாபாத்திரத்திற்கு திரைப்படங்களில் பெரியளவில் முக்கியத்துவம் வழங்கப்படாது ஒரு பகுதி பிரதிநிதித்துவத்தையே கொண்டிருந்தது. அதாவது பாலினத்தை தலைகீழாக மாற்றியமைத்தல் மற்றும் நளினம் முதலியவற்றுக்கே பயன்படுத்தப்பட்டனர்.

1920 களில் பொருளாதார மந்தம் காரணமாக திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த வேளை திருநங்கைகளது பிரச்சினையையே கருப்பொருளாக பிரதானமாக இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் கவனத்திருப்பை ஏற்படுத்துவதற்காக பல படங்கள் சர்ச்சைக்குரிய கருப்பொருளை தலைப்பாக எடுத்துக் கொண்டமை இயக்குநர்களின் உத்தியே எனலாம்.

திருநங்கைகளும் தென்னிந்திய சினிமாவும்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து ஏராளமான பதிவுகள் உள்ளன. இவற்றில் திருநங்கைகளின் பதிவுகளே அதிகளவில் இருக்கின்றன. பெரும்பாலான பதிவுகள் அவர்களைக் கேலிக்குரியதாக எடுக்கப்பட்ட காட்சிகளாகவே அமைந்துள்ளன. ஆனால் திருநம்பிகள் பற்றிய எவ்வித பதிவுகளும் இந்திய தமிழ் சினிமாவால் பதியப்படவில்லை. டி.ராஜேந்திரனின் (1980) 'ஒரு தலைராகம்' படத்திலிருந்து 'கூவுற கோழி கூவுற வேளை...' தொடங்கி ஷங்கரின் 'ஐ' திரைப்படம் வரையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் கேலியாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

'கட்டபொம்மன்' திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி வேலைத் தேர்வுக்காக காத்திருக்கும் திருநங்கைகளைத் திறமையற்றவர்களாகக் கருதி தவறான மதிப்பீட்டுடன் வெளியேறுகின்றார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் வையாபுரி திருநங்கையாக விஜயின் நண்பராக வரும் காட்சிகள் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளன. வசந்த் இயக்கத்தில் வெளிவந்த 'அப்பு'(2000) திரைப்படத்தில் ஆண்கள் திருநங்கைகளாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் திருநங்கையாக நடித்துள்ளார். இப்படம் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பெண்களைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளது. 

'சில்லுன்னு ஒரு காதல்' (2006) திரைப்படத்தில் வடிவேலுவிடம் உள்ள பணத்தை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமாகத் திருநங்கைகள் சித்திரிக்கப்படுகின்றனர். 'திருடா திருடி' எனும் திரைப்படக் பாடல் காட்சிகளில் திருநங்கைகளை கேலிசெய்யும் விதமாக அமைந்துள்ளது. இயக்குனர் அமீர்  'பருத்திவீரன்'(2007) திரைப்படத்தில் சில ஆண்களுக்கு சேலை உடுத்தி பெண்களாக அலங்கரித்து அவர்களை திருநங்கைகளாக காட்டியிருப்பார். 'ஊரோரம் புளிய மரம்..' என்ற பாடலையும் கேலியாக வெளிப்படுத்தியிருப்பார்.  

மாறாக, தென்னிந்திய சினிமாவில் மூன்றாம் பாலினத்தவரை சரியான புரிதல்களுடன் காட்டிய இயக்குனர்களும் உள்ளனர். திரையுலகில் திருநங்கைகளுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய 'பம்பாய்' படத்தில் கலவரச் சூழலில் பிரிந்து வாழும் சிறுவர்களைக் காப்பாற்றும் திருநங்கைகளாக கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

'தெனாவட்டு' (2008) திரைப்படத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் காட்டப்பட்டுள்ளது. இறுதியில் கதாநாயகர்களை வில்லனிடமிருந்து காப்பாற்றுவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. க்ரிஷ் இயக்கத்தில் வெளிவந்த 'வானம்' (2011) திரைப்படத்தில் திருநங்கைகளின் அன்றாட வாழ்வியல்  காண்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ'(2015) திரைப்படத்தில் நடித்த ஓரினச் சேர்கையாளரான ஓஸ்க்ராஜினி என்பவருக்கு வக்கிரமான பின்னணிக்குரலும் கொடுத்து, அப் படத்தின் நாயகன் முதல் நகைச்சுவை நடிகன் வரை ஏளனம் செய்யும் விதமாக திருநங்கை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்படச் சூழலில் இது போன்ற குறைந்தளவு படங்களை திருநங்கைகளுக்கு மதிப்பளிக்கும் காட்சிகளை அமைத்துள்ளன. இத்திரைப்படங்களின் வரிசையில் 'நவரஸா'(2005) திரைப்படம் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாக்கப்பெற்றதாகும். இப்படத்தில் வரும் திருநங்கை பகலில் ஆணாகவும் இரவில் பெண்ணாகவும் வலம் வரும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 'காஞ்சனா'(2011) திரைப்படம் குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மதிப்பளிக்கப்பட்டுள்ளது. 

திருநங்கைகளை மையமாகக் கொண்ட தென்னிந்திய திரைப்படங்களாக 'கருவறைப்பூக்கள்','நவரஸா' மற்றும் 'நர்த்தகி' முதலியன உள்ளன. இயக்குநர் லூதர்சேவியரின் திரைப்படமான 'கருவறைப்பூக்கள்' (2011) வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கையொருவர் சமூகத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதனை எங்ஙனம் வெற்றி கொள்கிறார் என கதையை நகர்த்தியுள்ளார். இயக்குநர் விஜயபத்மாவின் 'நர்த்தகி'(2011) திரைப்படம் கல்கி என்ற திருநங்கையின் வாழ்வியலினையும் திருநங்கைகள் குறித்த சடங்குகளையும்  வெளிப்படுத்துவதாக உள்ளது. 'கிரிக்கெட்ஸ்கேண்டல்' எனும் திரைப்படமானது முதன்முறையாக  திருநங்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

                               எல்லாவற்றுக்கும் மேலாக, திருநங்கைகள் தொடர்பில் வெளியான விளம்பரமொன்று, அவர்கள் மீது சமூகம் கொண்ட கருத்தியலில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளை இழிவுபடுத்தி வெளிப்படுத்திய அவர்களது உடல்மொழியை விழிப்புணர்வு ஊட்டும் வகையில் காண்பித்திருக்கின்றது. அதாவது, வாகன ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை  உணர்த்துவதற்கு அவர்களது உடல்மொழியை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பது சமூகம் கொண்டுளள மனமாற்றத்தை சுட்டி நிற்கின்றது.

Saturday 18 November 2017

யாழில் ஒரு கூவம்...


மாற்றங்கள் நிகழ வேண்டும். இடமாற்றங்களல்ல, மனமாற்றங்கள். அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் நாட்டின் வேகம் நிமிடத்துளிகளே. நவீன தொழில்நுட்பத்துடனும் நாகரிக வாழ்வுடனும் வரட்சியில்லாமல் வாழத் தலைப்பட்டுள்ளோம். 'குட்டிச் சிங்கப்பூர்' என்றழைக்கப்படும் இலங்கையின் முடிசூடிட்ட யாழ் நகர் இன்று சகல விடயங்களிலும் முன்னேறி வருவது பாராட்டத்தக்கது. இருப்பினும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் மைய நகராக விளங்கும் யாழ் நகரின் சுகாதார சுற்றுப்புறச் சூழலின் சுத்தம் எம்மாத்திரம்? இந்தியாவின் கூவத்தினையே நினைவுபடுத்துகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...


யாழ்ப்பாண நகர கடை வீதிகள், வைத்தியசாலையைச் சூழவுள்ள பகுதிகள், சந்தையினை அண்மித்த பகுதிகள் என முக்கிய இடங்களில் மழைநீர், கழிவு நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால் மற்றம் அதனுடன் இணைந்த வடிகால் அமைப்புக்கள் கோடை காலங்களிலும் கூட அசுத்தமான, நோய் பரவக்கூடிய தன்மையுடன் நீர் மற்றும் குப்பை கூழங்களுடன் தேங்கி நிற்பது யாவரும் அறிந்ததே. தினந்தோறும் யாழ் நகருக்கு அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், வைத்தியசாலையில் பணி புரிபவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்தோடும் வாய்க்கால்களினால் மக்கள் பலரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். 

பொறுப்புக்கூற வேண்டிய தலைமைகள்

குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கவலைக்கிடமான நிலையில் கவனிப்பாரற்று காணப்படுகின்றன. நோயாளர்களைக் குணப்படுத்தும் வைத்தியசாலைச் சுற்றுச் சூழலே இந்நிலையில் இருப்பதனால் நோயாளர்கள், பார்வையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கால்வாய்களை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்கள் 'அத்திபூத்தாற்' போன்றே வந்து சுத்தம் செய்வதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மாதத்திற்கு ஒரு தடவையாவது கூட இவற்றினைச் சுத்தப்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். 

யாழ் நகருக்கு அரச உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டே  இச்சுத்தப்படுத்தல் இடம்பெறுகின்றது. ஏனைய நாட்களில் இவ்வழியாக வருபவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டே நடந்து செல்ல வேண்டிய நிலையாக உள்ளது. வாய்க்காலினுள் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. வாய்காலினுள் காணப்படும் கழிவுகளை அகற்றி நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாய்க்காலிலிருந்து நீர் வடிந்தோடுவதற்காக இடப்பட்ட துவாரமானது சற்று மேலே உள்ளதால் நீரினளவு குறைந்திருக்கும் பட்சத்தில் வடிந்தோடாது தேங்கி நிற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ் நகரில் கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது, தினமும் இத்தகைய வாய்க்காலினூடாக துர்நாற்றம் வீசுவதாகவும், மாலை ஐந்து மணியளவில் நுளம்பின் தொல்லை அதிகரிப்பதாகவும், கடை உரிமையாளர்கள் சிலர் இணைந்து அறிவித்தால் மட்டுமே கழிவு வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதாகவும் கருத்தத் தெரிவித்தார்.